உயர்கல்வி குறித்து கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை என்ன சொல்கிறது?
இந்த தேசிய கல்விக் கொள்கை - 2019 வரைவறிக்கை நான்கு பகுதிகளைக் கொண்டதாக இருக்கின்றது. முதலிரண்டு பெரும்பகுதிகள் பள்ளிக் கல்வி, உயர்கல்விக்கென ஒதுக்கப்பட்டுள்ளன. வரைவறிக்கையின் இரண்டாம் பாகத்தில் 9 முதல் 20 வரை இருக்கின்ற 12 அத்தியாயங்களில் வாழ்க்கைத் தொழிற்கல்வி உள்ளிட்ட உயர்கல்வி குறித்த நோக்கங்கள் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. உயர்கல்வி குறித்து இந்த வரைவறிக்கை முன்வைக்கின்ற பரிந்துரைகளின் மீதான கருத்துக்களின் அடிப்படையில், நமது விமர்சனங்களை இங்கே முன்வைக்கலாம்.
சிக்கல்கள் என்ன?
துண்டு துண்டாகத் தனித்துக் கிடக்கின்ற உயர்கல்வி அமைப்பு, சிறப்பு பாடங்கள் மிக விரைவிலேயே அளிக்கப்பட்டு மாணவர்கள் குறிப்பிட்ட துறைகளுக்குள் அடைத்து வைக்கப்படுதல், சமூகம் மற்றும் பொருளாதரத்தில் பின் தங்கிய பகுதிகளில் உள்ளவர்கள் உயர்கல்வி பெறுவதில் உள்ள சிக்கல்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி இல்லாமை, ஆசிரியர்கள், நிறுவனத் தலைவர்கள் ஆகியோருக்கு பணியை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாமை, பெரும்பாலான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆய்வுகளுக்கான வசதிகள் இல்லாமை, ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்கான போதிய நிதியுதவி இல்லாமை, உயர்கல்வி நிறுவனங்களில் திறனற்ற தலைமை, போலியான கல்லூரிகளைத் தடுத்து நிறுத்த முடியாத ஒழுங்குமுறை அமைப்புகளால் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்படுவது போன்ற பிரச்சனைகளுக்குள் இந்திய உயர்கல்வி சிக்கித் தவித்து வருவதாக இந்த கல்விக் கொள்கை வரைவு இந்தியக் கல்விக்கான பிரச்சனைகளைப் பட்டியலிடுகிறது.
தீர்வுகள் என்ன?
பல துறைகளைக் கொண்ட மிகப் பெரிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைக் கொண்டதாக உயர்கல்வி அமைப்பை மாற்றுவது, தாராள கல்வியை வழங்குகின்ற வகையில் உள்ள பட்டப் படிப்புகளை வழங்குவது, ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி வழங்குவது, பாடவரைவு, கற்றுக் கொடுக்கும் முறை, மதிப்பீடு செய்தல், மாணவர்களுக்குத் தேவையான உதவி ஆகியவற்றை சரிப்படுத்தி முறைப்படுத்துதல், தர அடிப்படையில் பணி நியமனங்களை மேற்கொள்வதன் மூலம் ஆசிரியர் பணியிடங்களுக்கான நேர்மையை உறுதி செய்தல், தேசிய ஆராய்ச்சி முகமையை உருவாக்குதல், கல்விசார், நிர்வாகம்சார் தன்னாட்சியுடன் சுதந்திரமான ஆளுகை குழுக்கள் மூலமாக உயர்கல்வி நிறுவனங்களை ஆளுமை செய்தல், இலகுவான ஆனால் இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டு வருதல் என்று வரிசைப்படுத்தியிருக்கும் தீர்வுகளின் மூலமாக இத்தகைய சிக்கல்களில் இருந்து இந்திய உயர்கல்வியைப் பாதுகாத்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் இந்தியக் கல்வியில் உள்ள பிரச்சனைகளுக்கான தீர்வை இந்த வரைவறிக்கை முன்வைத்திருக்கிறது.
அடையப் போவது என்ன?
மனிதவள மேம்பாட்டுத் துறை என்று அழைக்கப்பட்டு வருகின்ற அமைச்சகம் இனிமேல் கல்வி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்ற முன்மொழிவுடன் தேசிய கல்வி ஆணையம், தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை அதிகார அமைப்பு, உயர்கல்வி மானியக் குழு, பொது கல்விக் குழு, தேசிய ஆராய்ச்சி முகமை, தேசிய கல்வி தொழில்நுட்ப அமைப்பு, கல்விக்கான தேசிய தரவுப் பெட்டகம் போன்ற புதிய அமைப்புகளை உருவாக்குகின்ற திட்டங்களையும் தன்னகத்தே கொண்டு இந்த வரைவு வெளியிடப்பட்டிருக்கிறது. முன்மொழியப்பட்டிருக்கும் இலக்குகளை அடைவதற்கான காலக்கெடு 2020இல் துவங்கி 2040ஆம் ஆண்டு வரைக்கும் என்பதாக இருபதாண்டு காலத்திற்கு நீள்கிறது.
நோக்கங்கள் என்ன?
தேசிய கல்விக் கொள்கை வரைவில் உயர்கல்வி குறித்த நோக்கங்களாக, இரண்டாவது பகுதியில் உள்ள அந்த 12 அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவை பற்றி இப்போது காணலாம்.
§ உலகத்தரத்திலான உயர்கல்வி நிறுவனங்களை நாடு முழுவதும் உருவாக்குவது
§ மொத்த மாணவர் சேர்க்கையை 2035ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதமாக உயர்த்துவது
§ உயர்கல்விக்கான இடத்தை அதிகரிக்கும் வகையில் உயர்தரத்திலான, பல்துறை சார்ந்த கல்வி நிறுவங்களை உருவாக்கி, அனைவரும் சமமாக அணுகுவதை உறுதிப்படுத்துவது
§ அனைத்து மாணவர்களுடைய முழுத் திறனையும் வளர்க்கின்ற விதத்தில் சிறப்பான, பரந்த தாராள கல்வியை அடிப்படைக் கல்வியாகக் கொண்டு, சில குறிப்பிட்ட துறை மற்றும் தளங்களில் அதிக தனித்தன்மை கொண்டதாக இருக்கின்ற கல்வியை அளிப்பதை நோக்கி நகர்வது
§ மகிழ்ச்சியான, நெறி தவறாத, கேள்வி கேட்கின்ற வகையில் இருக்கின்ற பாடவரைவு, ஈடுபாட்டுடன் செயலூக்கமுடைய கற்பித்தல் முறை, கற்றல் மற்றும் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு மிகுந்த அக்கறையுடன் துணை நிற்கும் செயல்பாடுகளை உறுதி செய்வது
§ உயர்திறனுடன் கற்பித்தல் மற்றும் ஆய்வுகளில் சிறந்து விளங்குகின்ற ஆற்றல் மற்றும் ஆழ்ந்த அர்ப்பணிப்பு கொண்ட ஆசிரியர்களை உறுதி செய்வது
§ பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆய்வுகளைத் தொடங்கி, வளர்ப்பதற்கான சிறப்பு கவனம் செலுத்துவது, நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வித் துறைகளிலும் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, அவற்றை உற்சாகப்படுத்துகின்ற வகையில் சக மதிப்பாய்வு செய்து வழங்கப்படுகின்ற நிதி, வழிகாட்டுதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்தி தருவதன் மூலம் ஆய்வுகளுக்கு உகந்த சூழலை உருவாக்குவது
§ ஆசிரியர் கல்வி முறையை பலதுறை அடங்கிய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதை நோக்கி நகர்வது
§ அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் நான்காண்டு கால ஒருங்கிணைந்த இளங்கலை பட்டத்தை குறைந்தபட்ச தகுதியாக்குவதன் மூலமாக உள்ளடக்கம், கற்பித்தல் முறை, பயிற்சி ஆகியவற்றில் ஆசிரியர்களுக்கு மிக உயர்ந்த தரமான பயிற்சி அளிக்கப்படுவதை உறுதி செய்வது
§ உயர்ந்த தரமான தொழில்முறைத் திறன்களுடன் கூடுதலாக, பரந்துபட்ட திறன்கள் மற்றும் 21ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான திறன்கள், சமூக-மனித சூழலைப் புரிந்து கொள்ளல், வலுவான நெறிமுறை வழிகாட்டி போன்றவற்றை உறுதி செய்வதன் மூலமாக வல்லுநர்களை உருவாக்குவதற்கான முழுமையான அணுகுமுறையை உருவாக்குவது
§ திறமையான, நெறிமுறைகள் கொண்ட தலைமையின் கீழ் சுதந்திரமான, தன்னாட்சி கொண்ட உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்குவது
§ உயர்கல்வியில் சிறந்து விளங்கி, பொது உணர்வை ஊக்குவிக்கும் வகையில் திறமையாகச் செயல்படுத்துகின்ற, பதில் சொல்லும் பொறுப்பு கொண்ட ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்குவது
§ திறமையான ஆசிரியர்களை உருவாக்கி, அவர்களுடைய மேம்பாட்டுக்கு உதவுதல்
§ கற்பித்தல், கற்றல், மதிப்பீட்டு செயல்முறைகளை மேம்படுத்துதல், பின்தங்கிய குழுக்களுக்கான கல்வி அணுகலை மேம்படுத்துதல், கல்வி குறித்த திட்டமிடல், நிர்வாகம், மேலாண்மை ஆகியவற்றை நெறிப்படுத்துதல் என்பது போன்ற குறிக்கோள்களை அடைவதற்காக கல்வியின் அனைத்து மட்டங்களிலும் தொழில்நுட்பத்தை பொருத்தமாக ஒருங்கிணைப்பது
§ பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்குள்ளும் வாழ்க்கைத் தொழிற்கல்வியை ஒருங்கிணைப்பது
§ 2025ஆம் ஆண்டிற்குள் கற்றவர்களில் குறைந்தபட்சம் 50% பேருக்கு வாழ்க்கைத் தொழிற்கல்விக்கான அணுகலை ஏற்படுத்தித் தருவது
என்று உயர்கல்வி குறித்த நோக்கங்கள் இந்த அத்தியாயங்களில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
மாற்றங்கள் என்ன?
800 பல்கலைக்கழகங்கள், 40000 கல்லூரிகள் என்பதாக தற்போது இருக்கின்ற உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை ஒட்டுமொத்தமாக 15000 என்ற அளவிற்குள் கொண்டு வருவது, ஆய்வு பல்கலைக்கழகங்கள், கற்பித்தல் பல்கலைக்கழகங்கள், பட்டம் வழங்கக்கூடிய தன்னாட்சிக் கல்லூரிகள் என்று மூன்று வகையான உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் நிலையைக் கொண்டு வருவது, பின்தங்கிய பகுதிகளில் உயர்தரத்திலான கல்வி நிறுவனங்களை அமைத்துக் கொடுப்பதற்கான முன்னுரிமை அளிப்பது, சிறப்பு கல்வி மண்டலங்களை உருவாக்குவது, புதிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக நாளந்தா, தக்சசீலா திட்டங்களை உருவாக்கி நிறைவேற்றுவது, தாராள கலைகளுடனான நான்காண்டு காலப் பட்டப் படிப்புகளை கொண்டு வருவது, மூன்றாண்டு பட்டப் படிப்புகளையும் தக்க வைத்துக் கொள்வது, பட்டப் படிப்பிற்குப் பிறகு ஓராண்டு, இரண்டாண்டு அல்லது ஒருங்கிணைந்த ஐந்தாண்டு கால முதுநிலைப் படிப்புகளைக் கொண்டு வருவது, பலநிலைகளிலும் வெளியேறி, பின்னர் உள் நுழைந்து கொள்கின்ற வசதிகளை எல்லா படிப்புகளிலும் ஏற்படுத்திக் கொடுப்பது, தெரிவு முறை மதிப்புறு பாடத் திட்டத்தை மேம்படுத்துவது, திறந்த நிலை, தொலை நிலைக் கல்விமுறையை விரிவுபடுத்துவது, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் தன்னாட்சி, தன்னாளுகை கொண்டவையாக மாற்றுவது, கல்வி நிறுவனங்களின் ஆளுகை குழு சுதந்திரமாகச் செயல்படுவதை உறுதிப்படுத்துவது, வெளியாட்களின் தலையீடு இல்லாத வகையில் துணைவேந்தர் பணி நியமனத்திலிருந்து அனைத்து பணி நியமனங்களையும் தரத்தின் அடிப்படையில் செய்து கொள்ள வழிவகுப்பது, தங்களுக்கு வேண்டிய பாடத் திட்டங்கள், பணி நியமனங்கள், நிதி மற்றும் பிற தேவைகளை உருவாக்கிப் பெற்றுக் கொள்வதற்கான சுதந்திரத்தை கல்வி நிறுவனங்களிடமே அளித்து விடுவது, கல்லூரிகளுக்கு இணைவிப்பு தருகின்ற பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகங்களுடன் இணைவிக்கப்பட்ட கல்லூரிகள் என்ற நிலைமையை ஒழித்து விடுவது, அனைத்து கல்லூரிகளையும் பட்டம் தருகின்ற உரிமை கொண்ட தன்னாட்சிக் கல்லூரிகளாக மாற்றுவது, தொழிற்கல்வி நிறுவனங்களை உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைப்பது, பாராளுமன்ற ஒப்புதலுடன் தேசிய ஆராய்ச்சி முகமையை ஏற்படுத்துவது, இந்த முகமையில் அறிவியல், தொழில்நுட்பம், சமூக அறிவியல், கலை மற்றும் மனித வாழ்வியல் என்று நான்கு பிரிவுகளை ஏற்படுத்திக் கொடுப்பது, கல்வி வணிகமயமாவதைத் தடுப்பது, இலகுவான ஆனால் இறுக்கமான கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகளைக் கொண்டு வருவது என்று உயர்கல்விக்கான நோக்கங்களின் மூலம் அடையப் போகின்றவை பற்றி இந்த 12 அத்தியாயங்களில் விளக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது.
சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த கல்விக் கொள்கை வரைவு உயர்கல்வி குறித்து கொண்டிருக்கும் நோக்கங்கள் குறித்தும், அது அளித்திருக்கும் பரிந்துரைகள் பற்றியும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்று ஆய்வு மையத்தில் பணிபுரியும் பேராசிரியர் கும்கும்ராய் எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி பத்திரிக்கையில் எழுதியிருக்கும் கட்டுரையில் தன்னுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். அந்தக் கட்டுரையில் அவர் அளித்திருக்கின்ற சில ஆலோசனைகள் இதோ நம் கவனத்திற்கு . . .
ஆலோசனைகள்
இந்த தேசிய கல்விக் கொள்கை வரைவானது, எதிர்கால சந்ததியினர் மீது தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்ற கல்விக் கொள்கைகளை கோடிட்டுக் காட்டுகின்ற மிகமுக்கியமான ஆவணமாக இருக்கின்றது. எனவே இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்தும் போது ஏற்படப் போகின்ற தாக்கங்களின் அடிப்படையிலேயே, இந்த வரைவு குறித்த விவாதங்களை நாம் மிகப் பரந்த அளவில் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
·இந்த கல்விக் கொள்கைகளின் மூலமாக அதிரடியான வகையில் உயர்கல்வி மறுசீரமைப்பு செய்யப்படப் போவதாக எதிர்பார்ப்புகள் இருப்பதால், இந்த கல்விக் கொள்கைகள் எந்த அனுமானத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளன என்பதை முதலில் அறிந்து கொள்வது மிக்க பயனுள்ளதாக இருக்கும். வரைவுக் கொள்கைகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்ற தீர்வுகள் கல்விக் கொள்கைகளாக மாற்றப்பட்டு அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே, உயர்கல்வி நிறுவனங்களில் நெடிய வரலாறுடன் நிலவி வருகின்ற பலவகைகளிலும் தனித்துவமாக இருக்கின்ற பிரச்சனைகளில் எவையெவற்றை இந்த கொள்கைகளை வடிவமைத்தவர்கள் கருத்தில் கொண்டிருந்தனர் என்பது பற்றி தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும். குறிப்பாக “மேம்பாடு” போன்ற வார்த்தைகளைப் பற்றிய தெளிவு வேண்டியிருக்கிறது.
·பெண்கள், ஏழைகள், விளிம்புநிலைச் சமூகங்கள் மற்றும் சாதிகள், பழங்குடியினர் போன்றவர்களை முன்னேற்ற வேண்டியது அவசியம் என்ற அடிப்படையில், இந்த வகைக்குள் வருபவர்களில் பலருக்கும் தேவையானவை எவை என்பது பற்றி கல்விக் கொள்கைகளை வகுத்தவர்களுக்குத் தெரியும் என்பதாக இந்த அனுமானம் இருக்கின்றது. பன்முகத்தன்மை மற்றும் வேறுபாடுகளை ஏற்றுக் கொள்கிற, அவற்றை மதிக்கின்ற ஒருங்கிணைந்த, பொதுவான கல்வி முறை விரும்பத்தக்கதல்ல அல்லது அத்தகைய கல்வி அடைய முடியாதது என்பதாகவும் அவர்களின் அனுமானம் இருக்கிறது. இந்த கல்விக் கொள்கைகள் நீண்டகாலத் தாக்கங்களை ஏற்படுத்தப் போகின்றவையாக இருப்பதால், இத்தகைய அனுமானங்களை ஏற்றுக் கொள்வதைக் காட்டிலும். அவற்றை மறுபரிசீலனை செய்ய வைப்பதே நம் முன் முதலாவதாக இருக்கின்ற அவசியத் தேவையாகிறது.
·பல்வேறு துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கிடையில் தடைகள் இருப்பதையும், அவ்வாறான தடைகள் உருவாக்கப்படுவதையும் இந்த ஆவணம் கண்டிப்பது சரியானதாகவே இருக்கிறது. ஆனாலும் புறக்கணிக்கப்பட்டவர்களில் மிகவும் விதிவிலக்கானவர்கள் தவிர பெரும்பாலானவர்கள் இத்தகைய தடைகளுக்குள் தள்ளப்படுகின்ற சூழ்நிலையை எதிர்கொள்ளப் போவதாகவே இந்த அனுமானம் இருக்கிறது. இவ்வாறான அனுமானம் தற்போதுள்ள சமூக, பொருளாதார வேறுபாடுகளை சீர்படுத்துவதற்கு அல்லது அகற்றுவதற்குப் பதிலாக, அத்தகைய வேறுபாடுகளை அதிகரிக்கவே செய்யும் என்பதால், அதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
·பெயரளவில் மட்டுமே இந்த ஆவணத்தில் உச்சரிக்கப்படுவதாக இருக்கின்ற அரசியலமைப்பிற்கு நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது. இந்த வரைவில் சட்டப்படிப்புகள் திட்டமிடப்பட்டிருக்கின்ற விதம் பற்றி பார்த்தாலே, இதற்கான தேவை அதிகம் இருப்பது தெரிய வரும். இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த ஆவணம் முழுவதும் முற்றிலும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.
·வேலைவாய்ப்பு என்பது மிகமுக்கியமானது என்றாலும், அது கல்வி நிறுவனங்களுக்குள்ளே ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான திறனுடன் இணைந்திருக்க வேண்டும். தற்போதுள்ள கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் அதிகாரப்படிநிலை கொண்டவையாகவே இருக்கின்றன. கூடுதலாக தங்களை மேற்பார்வையிடுகின்ற, கண்காணிக்கின்ற வலுவான அமைப்பின் கைகளில் இப்போது அவை சிக்கிக் கொண்டிருப்பதால், கேள்வி, விவாதம், கலந்துரையாடல், மாற்றுக்கருத்து போன்றவற்றிற்கான இடங்கள் இல்லாத நிலைமை உருவாகி இருக்கின்றது. வேற்றுமையையும், அதிகாரப் படிநிலைகளையும் வலுப்படுத்தக்கூடிய ஒரே தன்மையிலான நிர்வாகங்களே இப்போது நம்மிடம் இருக்கின்றன. நிர்வாகரீதியாகப் பயனுள்ளதாக இந்த முறை இருக்கும் என்றாலும், ஜனநாயகத்தின் வேர்களை அது நிச்சயம் பலவீனப்படுத்தி விடும். எனவே இது குறித்தும் இந்த ஆவணத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. அரசியலமைப்பிற்கு மாற்றாக சமூகத்தைக் கொள்வதன் மூலம் புறக்கணிக்கப்பட்டவர்கள் தங்களுடைய உரிமைகளைப் பெறுவது தடுத்து நிறுத்தப்படும். கப் பஞ்சாயத்துகளுக்கும், கவுரவக் கொலைகளுக்கும் இடையிலான தொடர்புகளை இந்த இடத்தில் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
·பாலினம், சாதி, வர்க்கம், இயலாமை, மாற்றுத்திறன், சிறுபான்மையினர் உரிமைகள், பழங்குடி மக்கள் உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முழு ஆவணமும் மிகக் கவனமாக பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். அனைவரையும் உள்ளடக்குவது குறித்து மிக எளிமையான, எந்திரத்தனமான அணுகுமுறைகளை நாம் இனிமேலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பாடவரைவு, பாடத் திட்டங்கள், பாடப் புத்தகங்களைப் போன்று இந்த கொள்கை முழுமையும், அனைவரையும் உள்ளடக்குவதாக இருக்க வேண்டும் என்று கருதுவதே உண்மையில் பொருளுள்ளதாக இருக்கும். அவ்வாறு அனைவரையும் உள்ளடக்குவதற்கு கல்வி நிறுவனங்களுக்குள்ளே இருக்கின்ற நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என்று அனைவரின் அணுகுமுறைகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். தற்போது இருக்கின்ற கட்டமைப்புகளை அகற்றி விட்டு, வரைவு ஆவணத்தில் குறிப்பிடுவது போல், அவற்றை மேலும் அதிக அதிகாரப் படிநிலை கொண்டவையாக மாற்றுவதை விட இத்தகைய அணுகுமுறை மாற்றமே மிகவும் முக்கியமானதாகும்.
·மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கான உறுதிப்பாட்டை இந்தக் கொள்கைகள் உறுதிப்படுத்திக் கொடுக்க வேண்டும், ஏனெனில் இது ’ஆதரவளிக்கின்ற நடவடிக்கைகளுக்கு’ குறைந்தபட்சமாகத் தேவைப்படுகின்ற அடிப்படையான உறுதிப்பாடாகும். இத்தகைய தேவைகளை நீக்கி விடவோ அல்லது நீர்த்துப் போகவோ செய்து விடாமல், மேலும் பலப்படுத்த வேண்டும். இது ஒன்றும் தனிச்சலுகை உரிமை பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற சேவை அல்ல, அவர்களின் உரிமை என்பதை இந்தக் கொள்கையை வடிவமைத்தவர்களுக்கு நாம் நினைவூட்ட வேண்டும்.
·மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாற்றுத்திறன் கொண்ட ஊழியர்களின் பிரச்சினைகள், அவர்களின் கவலைகள் மீது கவனம் செலுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அவை தீர்த்து வைக்கப்பட வேண்டும்.
·கற்றலுக்கு முக்கியமான தேவையாக மொழிகள் இருக்கின்றன என்றாலும், பிறருடைய விருப்பங்களுக்கு மாறாக அதில் தலையிட்டு சமஸ்கிருதம், ஹிந்திக்கு மட்டும் சலுகைகளை வழங்குவது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
·மதிப்பீடு செய்வதில் உள்ள சிக்கல்கள் உண்மையிலேயே மிகவும் சிக்கலானவை, உணர்வுப்பூர்வமானவையும்கூட. விரைவான தொழில்நுட்பத் தீர்வுகளின் மூலமாக இந்த சிக்கல்களைத் தீர்ப்பது பற்றி சிந்திப்பது எதிர்விளைவுகளையே விளைவிக்கும். மையப்படுத்தப்பட்டு இப்போது அதிமுக்கியத்துவம் தரப்பட்டு வருகின்ற தேசிய தேர்வு முகமைக்குப் பதிலாக, வெவ்வேறு கற்றல் துறைகளுக்கேற்றவாறு சூழல் சார்ந்த, மாறுபட்ட மதிப்பீட்டு முறைகளுக்கான வாய்ப்பை உருவாக்கிட வேண்டும்.
·தொழில்நுட்பங்களின் பயன்பாட்டைப் பயன்படுத்தி, கல்விமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு முன்பாக, அந்த தொழில்நுட்பங்களை முழுமையாகப் பெறுவது மற்றும் அவற்றின் இணைப்புகளில் உள்ள சிக்கல்களை முழுமையாகத் தீர்க்கப்பட வேண்டும்.
·இந்த 21ஆம் நூற்றாண்டில் புனரமைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற, வரலாற்று ஆய்வுகளால் புனரமைக்கப்பட்டு வருகின்ற சாதாரண மக்களின் சிக்கல் நிறைந்த வரலாறுகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கான உரிமை மாணவர்களுக்கு இருக்கிறது. இந்த வரலாற்றை எளிமையான சாதனைகளின் பட்டியலாக மிக எளிதாக மாற்றுவது எதிர்கால சந்ததியினருக்கு செய்கின்ற துரோகமாகவே இருக்கும்.
·உயர்கல்வி நிறுவனங்களுக்குள் உண்மையான தன்னாட்சி இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வப்போது தன்னிச்சையாக மேலிருந்து கீழாக வருகின்ற வகையில் நிதியுதவிகளை வழங்காமல், பொறுப்பேற்பின் அடிப்படையில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே முறையான கலந்துரையாடலை நடத்தி அந்தந்த கல்வி நிறுவனங்களின் தேவைகள் குறித்த மதிப்பீடுகளைப் பெற்று, நிதி உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதன் மூலமாகத்தான் உண்மையான தன்னாட்சியை உறுதிப்படுத்த முடியும்.
·தற்போதுள்ள அனைத்து துறைகளுக்கு மட்டுமல்லாது, எதிர்காலத்தில் புதிதாக வரக் கூடிய துறைகளிலும், உடனடிப் பொருத்தம் இருக்கிறதா, இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஆய்வுகள் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றிற்கான நிலைத்த இடம் உருவாக்கித் தரப்பட வேண்டும்.
·பல பல்கலைக்கழகங்களும், உயர்கல்வி நிறுவனங்களும் கல்வி மற்றும் நிர்வாகத்திற்கான பேரவைகளை உருவாக்கி ஜனநாயக வழிமுறைகளைத் தங்களிடம் தக்க வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. கொள்கைகள், படிப்புகள் மற்றும் பிற நிறுவன விவகாரங்கள் இந்தப் பேரவைகளில் வகுக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், அதேபோன்று பணிமூப்பு மற்றும் சுழற்சி அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களால் இந்த நிறுவனங்கள் ஆற்றல் மிக்க துடிப்பான கல்வி நிறுவனங்களாக மாற்றமடைந்திருக்கின்றன. இத்தகைய கட்டமைப்புகள், விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் மேலிருந்து கீழ் என்பதாக இருக்கின்ற நிர்வாக முறைக்கு ஆதரவாக மாற்றுவதன் மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்படும் என்பதால், இத்தகைய அமைப்புகளில் மாற்றம் செய்வதைவிட, அவற்றை நீட்டித்து பலப்படுத்த வேண்டும்.
·இறுதியாக, கடந்த முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளாக சவால்களைச் சந்தித்து மிகச் சிறப்பாக உருவாகி இருக்கின்ற பெண்கள் ஆய்வுகள் அல்லது பாலின ஆய்வுகள், கலாச்சார ஆய்வுகள், ஊடக ஆய்வுகள், தலித் ஆய்வுகள், பாகுபாடு மற்றும் விலக்கு பற்றிய ஆய்வுகள், சுற்றுச்சூழல் ஆய்வுகள், மேம்பாட்டு ஆய்வுகள் என்று மிகவும் துடிப்புடன் இயங்கி கொண்டிருக்கும் இந்த ஆய்வுகளுக்கான இடமும், ஊக்கமும் இன்னமும் தேவைப்படுகிறது. இவற்றைத் தவிர வரலாறு, அரசியல் அறிவியல், தொல்பொருள் போன்ற துறைகள் ஓரம் கட்டப்படுவதைத் தவிர்த்து விட்டு, அவற்றிற்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்கிட வேண்டும்.
எதிர்கொள்வது அவசியம்
வரைவறிக்கையில் உள்ள இந்த பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு கொள்கைகளாக மாற்றப்பட்டு அமலாக்கப்படும் பட்சத்தில், நாம் இதுவரை அறிந்திராத முற்றிலும் வேறான கல்விச் சூழலுக்குள் தள்ளப்பட்டு விடுவோம் என்பது நன்றாகப் புலப்படுகிறது. எதுவும் நிரந்தரமில்லை என்றாகி விடும் என்பது புரிகின்றது. இந்தக் கொள்கைகளை எவ்வாறு அமலாக்கம் செய்வது என்பது குறித்த ஞானம் சிறிதளவேனும் இந்த அரசிடம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதன் பின்னணியில் அவர்களுக்கு ஒரு நோக்கம் இருப்பதுவும், ”கொள்கைகளை அமலாக்குவோம். பிரச்சனை வந்தால் தீர்வு காண நமக்குத் தெரியாது. அப்போது மக்கள் என்ன செய்வார்கள். அது நமக்குத் தெரியும். பண மதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்ட அனுபவம் நமக்கு இருக்கிறது. அதை துயர்கொண்டு சமாளித்து மறந்து போன அனுபவம் மக்களுக்கு இருக்கிறது. ஜியோ இருக்கிறது. வாட்ஸ் ஆப் இருக்கிறது. நாம் ஏன் கவலைப்பட வேண்டும்” என்று ஆட்சியாளர்களிடம் இருக்கின்ற திட்டமும் நமக்கு கண்கூடாகத் தெரிகிறது. இருபதாண்டு காலத்திற்கு திட்டமிடப்பட்டிருக்கும் அடுத்த தலைமுறைக்கான இந்த திட்டம் கருக்கொள்ளப் போகின்ற தலைமுறையிடம் ஏற்படுத்தப் போகின்ற தாக்கங்கள் குறித்த கவலை எதுமின்றி புல் மேயும் மாடுகளாக கழுத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைபேசிகளின் திரைகளைத் தடவிக் கொண்டிருக்கப் போவது ஒருபோதும் விடிவைத் தராது என்பது மட்டும் நிச்சயம். அவர்களுக்கான இந்த திட்டத்தில் அவர்கள் வெற்றியடைவது மனித சமூகத்திற்கு உகந்ததல்ல என்பதுவும் நிச்சயம்.
உயர்கல்வி குறித்து இந்த வரைவறிக்கை முன்வைக்கின்ற பரிந்துரைகள் மீதான விமர்சனங்கள் அடுத்து. . .
(தொடரும்)
கட்டுரையாளர்: முனைவர் தா.சந்திரகுரு
விருதுநகர்